mercredi 5 janvier 2011

திருக்குறள் திலீபன் வளர்க! வாழ்க!



திருக்குறள் திலீபன்

இடைவிடாத பணிகளுக்கு இடையே அவ்வப்பொழுது மகிழ்ச்சிச் செய்தி ஏதேனும் காதில் விழுந்து ஊக்கம் தருவது உண்டு. அவ்வகையில் ஓரிரு நாளுக்கு முன்பு செல்பேசியில் ஓர் அழைப்பு வந்து. திருவாளர் ம. தங்கச்சாமியார் பேசினார். காரைக்குடியில் வாழும் அண்ணன் மு.பாரி அவர்கள் அந்த அன்பரை என்னிடம் ஆற்றுப்படுத்தியிருந்தார் என்று அறிந்தேன்.

திரு.தங்கச்சாமியார் மகன் பெயர் திலீபன் என்றும் பதினொன்றாம் வகுப்பில் படிக்கின்றார் என்றும் அறிந்தேன். கவனகக் கலையில் வல்லவர் என்றும் திருக்குறளின் குறட்பாக்கள் அனைத்தும் மனப்பாடம் என்றும் குறிப்பிட்டார். கி.பி.முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 10,000 ஆம் ஆண்டு வரை உள்ள எந்த மாதம், ஆண்டு, நாள் குறிப்பிட்டாலும் கிழமையைச் சொல்லும் பேராற்றல் பெற்றவன் என்றும் அறிந்தேன். தன்னையொத்த குழந்தைகளுக்கு இலவசமாக நினைவுக்கலையையும், திருக்குறளையும் பயிற்றுவிக்கின்றாராம். குறள்மணிகள் சிறுவர் நூலகம் அவர் இல்லில் உள்ளது. உலக நாடுகளின் பெயரை ச்சொன்னால் தலைநகரைச் சொல்வார் என்றார். தமிழக அரசு திருக்குறள் முழுமையும் சொன்னால் மாதந்தோறும் 1000 உருவா வழங்கும் திட்டத்தில் திலீபனுக்கு நிதியுதவி கிடைக்கின்றது. அப்படி என்றால் அவர் பற்றிய குறிப்பை உடன் அனுப்பும்படி வேண்டிக்கொண்டேன். அதன்படி இன்று ஒரு குறுவட்டும், செய்திக்குறிப்பும் வந்தன. குறுவட்டை இயக்கிப் பார்த்தேன்.

செயா தொலைக்காட்சியில் திருக்குறள் திலீபனை இயக்குநர் விசு அவர்கள் அறிமுகப்படுத்தியதைக் கண்டு மகிழ்ந்தேன். முன்பே நான் திருக்குறள் பிரதிபா அவர்களின் கவனகக் கலையைக் கண்டு வியந்தவன். அவர்களைப் போல் பிள்ளைகளுக்குத் திருக்குறளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தவன். நான் முன்பு பணி செய்த கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் இருந்த அஞ்சல் அலுவலகத்தில் பணி செய்த இரமேசு என்ற அஞ்சல் அதிகாரி என்னைப் பற்றி அறிந்து ஆரணி அடுத்துள்ள திமிரி என்ற ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவியை அழைத்து வந்து என்னிடம் அறிமுகம் செய்தார்.

அந்த மாணவியின் பெயர் தீபா. எட்டாம் வகுப்பு அவர் படித்தார் என்று நினைவு. அவரின் திருக்குறள் ஆர்வத்தை அறிந்து அவர்களை நெறிப்படுத்தி 1330 குறட்பாக்களும் அறிந்தவராக மாற்றினேன். எங்கள் கல்லூரியின் தாளாளரும் மிகச்சிறந்த திருக்குறள் பற்றாளருமாகிய சக்தி ப.அன்பழகன் அவர்களின் கவனத்திற்குத் தீபாவின் திருக்குறள் ஈடுபாட்டைச் சொல்லி அறிமுகப்படுத்தினேன். எங்கள் தாளாளர் அவர்கள் பணப்பையை எடுக்க மறந்தாலும் அவர் வழிப்பயணத்தில் திருக்குறளை மறவாமல் எடுத்துச்செல்வதும், ஓய்வு நேரங்களில் படிப்பதும் நம் போலும் தமிழறிஞர்களிடம் திருக்குறள் பற்றி, வள்ளலார் பாடல் பற்றி உரையாடுவதும் அவர்களின் வழக்கம். எங்கள் தாளாளர் சக்தி ப.அன்பழகன் அவர்கள் பள்ளி மாணவி தீபாவைத் தம் செலவில் கல்லூரியில் உரிய காலத்தில் படிக்க வைக்க விரும்பினார்கள். அவருக்கு ஓர் உயர்பரிசில் உடனடியாக வழங்க நினைத்துத் தம் அறையில் அழகுடன் காட்சி தந்த ஒரு விலை உயர்ந்த கடிகாரத்தைப் பரிசிலாக வழங்கினார்கள். இவ்வாறு திருக்குறள் அறிந்தவர்களைப் போற்றிய எனக்குத் திலீபன் பற்றி செய்தி கிடைத்தால் விடுவேனா?

திருக்குறள் திலீபன் காரைக்குடியில் உள்ள மீ.சு.வி.மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கின்றார். இந்தப் பள்ளி கவியரசு முடியரசனார் உள்ளிட்ட பெருமக்கள் பணிபுரிந்த பெருமைக்குரியது. 97 ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றும் இந்தப் பள்ளியில்தான் இயக்குநர் சுப.முத்துராமன் உள்ளிட்டவர்கள் படித்தனர்.


மழலைகளுக்குத் திருக்குறள் பயிற்றுவிக்கும் திருக்குறள் திலீபன்


திருக்குறள் திலீபன்(இன்னொரு தோற்றம்)

அப்பள்ளியில் நன்கு படித்து வரும் திருக்குறள் திலீபன் எதிர்காலத்தில் உயர்படிப்பைத் தொடர உதவுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகக் கருதுகின்றேன். திருக்குறள் திலீபனின் தந்தையார் திரு.ம.தங்கச்சாமி ஐயா அவர்கள் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிகின்றார். தமிழ்ப்பற்றும்,இனப்பற்றும் கொண்ட பெருமகனாரின் குழந்தை அவர்களின் குடும்பத்திற்கு மட்டும் உரிய குழந்தை என்று கருதிவிட முடியாது. திருக்குறள் திலீபன் உலகத் தமிழரின் சொத்து. அவரைப் போற்றுவதும் பாராட்டுவதும் உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் கடமையாகும். திரைப்பட நடிகைகளை, நடிகர்களையும் பட்டிமன்றப் பேச்சாளர்களையும் அழைத்துத் தமிழ்ச்சங்கம் திறப்புவிழா நடத்தும் தமிழர்கள் தங்கள் செயலை நிறுத்தித் திருக்குறள் திலீபன் போன்ற அறிவுச்செல்வங்களைப் போற்றினால் நம் இனத்தில் இன்னும் பல திலீபன்கள் தோன்றுவார்கள்.

திருக்குறள் திலீபன் பதின்கவனகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.

அவை: 1.குறள் கவனகம், 2.எண் கவனகம் 3. எழுத்துக் கவனகம் 4. கூட்டல் கவனகம், 5.பெயர்க் கவனகம், 6.ஆண்டுக் கவனகம், 7. மாயக் கட்டம்
8. வண்ணக் கவனகம், 9.தொடு கவனகம், 10.ஒலிக் கவனகம்

திலீபனின் தந்தையார் திரு.தங்கச்சாமியார் மேல் எனக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் திலீபன் என்னும் அறிவுச்செல்வத்தை வழங்கியது மட்டும் அன்று. திரு.தங்கச்சாமியார் அவர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மேல் பெரும் மதிப்புடையவர் என்பதும் ஐயாவுடன் பல காலம் பழகியவர் என்பதும் அறிந்து அவர்மேல் பன்மடங்கு மதிப்பு ஏற்பட்டது.

திருக்குறள் திலீபனைத் தொடர்புகொள்ள:

திருக்குறள் த.திலீபன்,
த / பெ. திரு.ம.தங்கச்சாமி,
4 / 1 நான்காவது வீதி,
முடியரசன் சாலை,
காரைக்குடி-630 001
சிவகங்கை மாவட்டம்,
தமிழ்நாடு

செல்பேசி + 91 94865 62716
செல்பேசி + 91 94872 14745

தகவல் -முனைவர் மு.இளங்கோவன்

0 commentaires:

Enregistrer un commentaire